பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் ‘வேளாண் வணிகத் திருவிழா’ நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடக்கும், இந்த திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், விதை, செடி விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. விவசாயிகளுக்கு நல்ல முன்னெடுப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் விவசாயிகளுக்கு உருவாகும். வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னேறி வருகிறது. மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்து வருகிறோம். உரங்களை போதிய அளவில் வழங்கும் படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நடபாண்டில் 5.65 லட்சம் ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. குறு தானியம், நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். முதலிடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறோம். 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 456.46 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டி உள்ளோம். தமிழகம் முந்திரி வாரியம் என்னும் தனி அமைப்பை உருவாக்கியுள்ளோம். 7 விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்று தந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.