கோவில்களில் பக்தர்கள் ‘ரீல்ஸ்’ எடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 52 இந்து கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களை பாதுகாக்க கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு செல்போனுக்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருச்சியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம்
அரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களில் செல்போன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.
ஒரு சில கோவில்களில் செல்போனை வாங்கி வைத்துவிட்டு டோக்கன் கொடுக்கும் இடத்தில் சில்லறை தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சியில் உள்ள ஐந்து பிரதான கோவில்களிலும் செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு அறையில் உள்ள லாக்கரில் வைத்து, அதற்கான டோக்கனை மட்டும் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.