ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தமிழக ஆளுநர் சுவாமி தரிசனம்…* கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார் !
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார்.பின்னர் அவர் கார் மூலம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், மூத்த அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பேட்டரி காரில் சென்ற அவர், சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி, கருடாழ்வார்
சன்னதிகளில் தரிசனம் செய்தார். தொடர்ந்து தங்க கொடிமரத்தை வணங்கிய பின் மூலவர் பெரிய பெருமாளை பய பக்தியுடன் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து தாயார் சன்னதிக்கு சென்று ரங்க நாச்சியாரையும் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவில் ஆண்டாள் யானைக்கு பழங்களைக் கொடுத்து ஆசி பெற்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம்
சென்று சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ஆளுநர் வருகையால் மாநகரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.

Comments are closed.