பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்… * போலீசாருக்கு திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் அறிவுறுத்தல்…!
திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீசாருக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் நா.காமினி ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் பி.சிபின், டி.ஈஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது காமினி ஐபிஎஸ் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீதும், கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை, செய்பவர்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாதி மற்றும் மத ரீதியாக எழும் பிரச்சனைகளின் போது காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று மோதல்களை தடுத்து உடனடியாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், காவல் நிலையங்களில் பதிவாகி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவைத்துக் கொள்ள வேண்டும். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.அவர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும். இல்லையெனில் புகார் மனுவிற்கு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும்,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் குழுவினரையும், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட உறையூர் காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினரையும் நேரில் அழைத்து பணி பாராட்டு சான்றிதழை வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
Comments are closed.