Rock Fort Times
Online News

ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை…!

ஆங்கில புத்தாண்டு 2025 பிறப்பையொட்டி, திருச்சி மாநகர பகுதியில் இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் பெரியகடை வீதி, என்.எஸ்.பி.சாலை, தில்லை நகர் மெயின்ரோடு பகுதிகளில் உள்ள உணவக விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சில நட்சத்திர விடுதிகளில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து புத்தாண்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர்.  மேலும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இளைஞர்கள் பலர் நள்ளிரவு வேளையில் இருசக்கர வாகனங்களில் ஹேப்பி நியூ இயர் எனக் கூறியபடி வலம் வந்தனர். சில இடங்களில் இளைஞர்கள் பட்டாசு வெடித்தனர். கண்கவர் வாண வேடிக்கைகளும் நடத்தினர். சமூக வலைதளங்களான பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்-அப் மூலமும் புத்தாண்டு வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறிக்கொண்டனர்.

மேலும், திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், புனித சகாயமாதா பசிலிக்கா, அரிஸ்டோ ரவுண்டானா யோவான் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கியமாதா ஆலயம், சந்தியாகப்பர் ஆலயம், மெயின் கார்டுகேட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், மாம்பழச்சாலை அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. இன்று காலையும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.  மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில், ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோவில், ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மேக்குடி ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அத்துமீறி சென்ற இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் மாநகர் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளில் கேக் மற்றும் இனிப்பு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்