மணல் திருட்டை தடுக்கமுயன்று கொடூர தாக்குதலுக்கு உள்ளான ஆர்.ஐ!
கலெக்டரின் அதிரடி ஆக்ஷனால் 3 பேர் கைது !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ளது நரசிங்கபுரம் கிராமம். மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில், சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று மணல் அள்ளுவதை தடுக்க முயன்ற இவரை, மணல் மாஃபியா கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஆர்.ஐ சிகிச்சைக்காக துறையூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விவகாரம் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தெரியவர, அடுத்த நிமிடமே அதிரடியாக ஆக்ஷனில் இறங்கியுள்ளார் கலெக்டர் மா.பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ். இவரின் துரித நடவடிக்கையால் மணல் திருட்டை தடுக்க முயன்ற வட்ட வருவாய் ஆய்வாளரை தாக்கிய, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், தனபால், மணி, ஆகியோரை காவல்துறை கைது செய்து 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமறைவாகியுள்ள கந்தசாமி என்பவரை தீவிரமாக தேடிவருகிறது.
திமுக தலைமையும் ஊராட்சி மன்ற தலைவரான மகேஷை கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆர்.ஐ பிரபாகரனை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அரசு அலுலர்களை பணிசெய்யவிடாமல் தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்காது எனவும் எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் துடிப்பாக செயலாற்றி வரும் இளம் கலெக்டரான பிரதீப்குமார் ஆர்.ஐ தாக்கப்பட்ட விவகாரத்தில் வேகமாக செயல்பட்டு ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்ய நேரடியாக களம் இறங்கியதும் தாக்குதலுக்குள்ளான ஆர்.ஐயை நேரடியாக சென்று நலம் விசாரித்து உறுதுணையாக நின்றதும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நமக்கும் மாவட்ட ஆட்சியர் துணை நிற்பார் என்ற நம்பிக்கை திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள் மனதில் ஆணித்தனமாக பதிந்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.