திருச்சி தில்லைநகரில் கடந்த மாதம் ஏப்ரல் மாதம் 17-ந் தேதி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் , காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து அவரது மோட்டார் சைக்கிளை சிலர் எரித்தனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதேநாளன்று சாஸ்திரிரோட்டில் உள்ள டீக்கடை அருகே சைக்கிளில் தையல்மிஷின் வைத்து தொழில் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.2 ஆயிரம் பறித்து கொண்டு 3 பேர் தப்பியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிந்து, தென்னூரைச் சேர்ந்த வீரப்பன் என்கிற ராஜ்குமார் (வயது 23), மாரியப்பன் (19), விக்னேஷ் ஆகியோரை காவல்துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், ரவுடியான ராஜ்குமார் மீது கோட்டை, தில்லைநகர், உறையூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து அவரது மோட்டார் சைக்கிளை எரித்து மிரட்டல் விடுத்த வழக்கு உள்பட 14 வழக்குகளும், மாரியப்பன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமார், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியப்பிரியா ஐபிஎஸ் உத்தரவிட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.