ஹெல்மெட்’ அணியாமல், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போலீசாரை ‘சஸ்பெண்ட்’ செய்ய டி.ஜி.பி.சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தவறினால், போக்கு வரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். அடுத்தடுத்து ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகள் பிடிபட்டால், அவர்களுக்கு அபராதத்துடன், ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் ஒரு சிலர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை படம் பிடித்து, ‘வீடியோ’ எடுத்து, காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களில் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். இது, காவல் துறையினருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. எனவே, ஒழுங்கீனமான போலீசார் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Comments are closed.