இன்றைய இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் (வீலிங்) செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், அனைவரின் பார்வையும் நம் மீது விழ வேண்டும் என்பதற்காக அதிக சத்தம் எழுப்பக்கூடிய மோட்டார் சைக்கிள்களை ஒட்டி செல்கின்றனர். இது பொதுமக்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் தடுப்புச் சுவரில் ஒரு வாலிபர் மொபட்டை ஓட்டிச் சென்று சாகசம் செய்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபோன்று மோட்டார் சைக்கிள்களில் லிவிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுமருதூர் மேம்பாலம் அருகே கடந்த 22ம் தேதி பரணிதரன்(19), தேவனரசன்(19) மற்றும் செபாஸ்டின் டேனியல்(19) ஆகிய மூவர் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்தனர். இதனை அறிந்த சமயபுரம் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட பரணிதரன் மற்றும் செபாஸ்டின் டேனியல் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள தேவனரசனை தேடி வருகின்றனர்.
Comments are closed.