எடப்பாடி பழனிச்சாமி அணியினரின் எச்சரிக்கையை தொடர்ந்து புதிய கொடியுடன் ஓ.பி.எஸ் அணியினர் திருச்சி மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் வரும் 24ம் தேதி அதிமுகவின் ஓ.பி.எஸ் அணியினரின் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக திருச்சி பொன்மலை ஜி.கார்னர் இரயில்வே மைதானத்தில் பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதனிடையே அதிமுகவின் கட்சி கொடி மற்றும் தேர்தல் சின்னமான இரட்டை இலை ஆகியவற்றை தங்களை தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. அதனை மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், ஃபிளக்ஸ் பேனர்கள் மற்றும் மாநாடு நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் நடப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் ஆகியவற்றில் அதிமுகவின் கொடி மற்றும் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வமான கொடியில் மேலே கருப்பு, கிழே சிகப்பு, நடுவில் அண்ணாவின் உருவம் வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். அதில் இரட்டை இலை சின்னம் இருக்காது. அதிமுகவின் தேர்தல் சின்னத்தில், இரட்டை இலை மட்டும் இருக்கும். அதில் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருக்காது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தியுள்ள கொடிகளில் மேலே கருப்பு, கீழே சிகப்பு, வெள்ளை நிறத்தில் அண்ணாவின் உருவம், பச்சை நிறத்தில் இரட்டை இலை சின்னம் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன. இது ஓபிஸ் அணியினரின் புதிய கொடியாக தோற்றமளிக்கிறது. மாநாட்டு திடலில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணியும், பார்வையாளர்கள் அமர்வதற்கான நாற்காலிகள் மற்றும் தடுப்புகள் அமைக்கும் பணியும், கொடி தோரணங்கள் கட்டும் பணியும் மும்மரமாக நடந்து வருகிறது
.

