சிவராத்திரி மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
சிவராத்திரி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மகா சிவராத்திரி மற்றும் முகூர்த்த தினமான வெள்ளிக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும், மற்ற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களுக்கு வியாழக்கிழமை (மார்ச் 7) 270 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 390 பேருந்துகளும், சனிக்கிழமை 430 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1360 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்பி வர வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.