தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று(17-07-2026) தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் பரவியது. என்ன காரணத்துக்காக அவர் ஆளுநரை சந்திக்கப் போகிறார் என்கிற பரபரப்பு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் தொற்றிக் கொண்டது. முதல்வரும் ஆளுநர் மாளிகைக்கு செல்வதுபோல் காரில் புறப்பட்டார். அவருடன் அதிகாரிகளும், பாதுகாப்பு படை வீரர்களும் பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் அவர் ஆளுநர் மாளிகைக்கு செல்லவில்லை. கார் சைதாப்பேட்டையை நெருங்கிய போது அங்குள்ள சமூக நீதி விடுதிக்கு செல்லுமாறு கூறினார். இதனால், கார் மாற்றுப்பாதையில் சென்றதால், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரே திணறிப் போனார்கள். திடீரென சமூக நீதி விடுதிக்கு சென்ற முதல் அமைச்சர் விஜயை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் அதிர்ந்து போனார்கள். பின்னர், விடுதியில் ஒவ்வொரு இடமாக சென்று முதல்வர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 10 தளங்கள் மற்றும் லிஃப்ட் வசதியுடன் ரூ.44 கோடி செலவில் கடந்த திமுக ஆட்சியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த விடுதியில் தான் முதலமைச்சர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.