திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2கோடியே 14 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிராட்டியூர் குளம் 110 ஏக்கரில் உள்ள முட்செடிகள், உள்ளிட்டவற்றை அகற்றி தூர் வாரும் பணியை இன்று அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்… திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சிதிட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒருபகுதியாக இன்று பிராட்டியூர் குளத்தை, 14 லட்சத்தில் தூர்வாருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ராஜா காலனியில் 15.50 லட்சம் செலவில் பொதுமக்கள் உருவாக்கிய இறகு பந்து மைதானதம் இன்று திறக்கப்பட்டது.மேலும் சண்முகா நகர் பகுதியில் 10 லட்சம் செலவில் பொதுமக்கள் வைத்துள்ள 85 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை திறந்து வைத்துள்ளோம். சண்முகா நகரில் பொதுமக்களின் தேவைக்காக 80 லட்சம் செலவில் ஒரு புதிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆழ்வார்தோப்பு பகுதியில் குழுமிக்கரையில் புதிய ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் 95லட்சம் செவில் கட்டப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்று கேட்டதற்க்கு, எதுவாக இருந்தாலும் அதை பேசி தான் தீர்வு காண முடியும். பேசி ஒரு நல்ல முடிவாக எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பழனியாண்டி, திரு.ஸ்டாலின் குமார், முக்கிய பிரமுகர் திரு. வைரமணி, நகர பொறியாளர் திரு. சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.