திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.350 கோடி திட்ட மதிப்பீட்டில் இதற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதில், பொது மக்களுக்கு தேவையான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யேக தடங்கள், ஓய்வறைகள், குளீரூட்டபட்ட தங்கும் அறைகள், ஆம்னி பேருந்துக்கான தனி வழித்தடம் என பிரமாண்டமாக தயாராகி வருகிறது. மேலும், இந்த பேருந்து முனையத்திற்கு நாள்தோறும் வட மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு என ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகளை நகராட்சி
நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(22-01-2025) நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.