குடிநீர் பாட்டில்களில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’…- எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அதற்கான எச்சரிக்கை வாசகங்களை பாட்டில்களில் இட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரதசக்கரவர்த்தி ஆகியோரின் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதார துறை சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆய்வுகள் லக்னோ, கொச்சி, பிலானி ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.