போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில், காட்டாங்கொளத்தூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை தனிப்படை போலீசார், காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கினர். இதில், பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) எண்ணும் இருந்தது. இதனையடுத்து, அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக அலிகான் துக்ளக், செயது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகிய 4 பேரை போலீசார் இன்று(04-12-2024) கைது செய்தனர்.
Comments are closed.