காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன் லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு மணமுடித்து கொடுத்தனர். இவர்களுக்கு லாவண்யா (13) என்ற ஒரு மகளும் புவனேஷ்(9)என்கிற ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சரவணனின் மனைவி காஞ்சனா குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சரவணன் லாவண்யாவையும், புவனேஷையும் விச்சந்தாங்கலில் தனது மனைவி வீட்டாரிடம் விட்டு விட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா,பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் லாவண்யா 7-ஆம் வகுப்பும், புவனேஷ் 4-ஆம் வகுப்பும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழைமை விச்சந்தாங்கலிலுள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழாவின் கடைசி நாள் விழா நடைபெற்றது. இரவு மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண,வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடானது. அப்போது காண்டீபன் தனது பேத்தியான லாவண்யாவை உடன் வர வேண்டாம் என்று கூறி வீட்டிற்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிறுமி லாவண்யா தனது தாத்தாவிற்கு தெரியாமல் மாட்டுவண்டியின் பின்புறம் அமர்ந்தபடி சென்றார். ஏதிர்பாராத விதமாக மாட்டு வண்டியின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஜென்ரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கியது. சிறுமியின் கதறல் சத்தத்தினை கேட்டு ஓடிவந்த அனைவரும் உடனடியாக ஜென்ரேட்டரின் இயக்கத்தினை நிறுத்தி தலையின் மேல் பகுதி முழுவதும் பெயர்ந்து, படுகாயங்களுடன் இருந்த சிறுமி லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சகிசைக்காக சேர்த்தனர், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாகரல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாவண்யா உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.