திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் மகன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம் – சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் நடவடிக்கை எடுப்பாரா ? (வீடியோ இணைப்பு)
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு, கடந்த 21-09-2024 (சனிக்கிழமை) அன்று காலை 8-30 மணி அளவில் தீரன் என்கிற மூன்றரை வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 10-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்னும் சிறுவன் ஓட்டி வந்த புல்லட் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் சுருண்டு கீழே விழுந்த அந்த சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் சிறிதும் கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிளில் அமர்ந்த படியே திட்டிக்கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த சிறுவனின் தாத்தா (காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்) ஓடி வந்து தனது பேரனை மீட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கேஎம்.சி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவனின் தந்தை முருகராஜ் என்பவர் திருச்சி கே.கே.நகரில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த விபத்து தொடர்பாக காயம் அடைந்த சிறுவன் தரப்பிலிருந்து இதுவரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் புகார் எதுவும் பெறப்படவில்லை. காவல்துறையில் பொறுப்புள்ள ஒரு பதவியில் இருக்கும் அவர் தன்னுடைய மகனிடம் எப்படி புல்லட்டை நம்பி கொடுத்தார். ஏதோ காயங்களுடன் அந்த சிறுவன் உயிர் தப்பி உள்ளான். இதுவே வேறு விபரீத சம்பவம் ஏற்பட்டு இருந்தால் என்ன செய்வது?. இதுபோன்று நடந்து கொள்பவர்களை கண்டிக்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவரே தனது மகனிடம் புல்லட்டை கொடுத்து அனுப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது. இதுபோலத்தான் திருச்சி சிட்டி பகுதிகளில் சிறுவர் சிறுமிகளிடம் இருசக்கர வாகனங்களை பெற்றோர்கள் நம்பி கொடுத்து வருகின்றனர். அவர்கள் ஏனோ தானோ என்று ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சிலசமயம் விலை மதிப்பற்ற உயிர்களும் பறிபோய் விடுகிறது. இனிமேலாவது இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.