Rock Fort Times
Online News

கிடைத்தது கிரீன் சிக்னல் திருச்சியிலிருந்து இலங்கைக்கு செல்லும் முருகன், ஜெயக்குமார் ராபர்ட்!

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாந்தன் இலங்கைத் தமிழர். அவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

 

இந்தச் சூழலில் தான் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சாந்தன் இலங்கைத் தமிழர் என்பதால் அவர் திருச்சியில் சிறப்பு முகாமில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சாந்தன் அங்கிருந்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடந்த 32 வருடங்களாகத் தனது தாயாரைப் பார்க்கவில்லை என்றும் தாயின் முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.

மேலும், ஒரு மகனாக உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவர்களுக்கு இலங்கை தூதரகம் தற்காலிக பாஸ்போர்ட் வழங்கி இருந்தது. அவர் விரைவில் இலங்கை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்கப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில்,

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமிலிருந்த முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் மூவரும் சிறப்பு முகாமிலிருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நாளை அவர்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்