அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார். கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவான தளவாய் சுந்தரம் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியை இவர் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக அவர் பாஜகவினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவரது கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாகவும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்ட கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளவாய் சுந்தரம் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.