ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக சார்பில் தேமுதிகவில் இருந்து திமுகவிற்கு அணி தாவிய முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து தற்போது தேமுதிகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதேபோன்ற இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்கப்போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் ஈரோடு இடைத்தேர்தவை புறக்கணித்துள்ளதால் பிஜேபி வேட்பாளருக்கு இவ்விரு கட்சிகளின் ஆதரவு மறைமுகமாக கிடைக்க வாய்ப்பு
உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.