சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேமுதிக குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சில யுடியூப் சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. அதை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. லஞ்ச ஊழல், சொத்துகுவிப்பு வழக்கு, கள்ளச்சாராய வழக்கு, குண்டர் சட்டத்தில் கைது, கனிமவள கொள்ளை வழக்கு என ஏதாவது ஒரு குற்றம் தேமுதிகவின் மீது சுமத்த முடியுமா?. 21 வருடமாக இருக்கும் கட்சி, 29 எம்.எல்.ஏ.க்களை கொண்டு எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு சென்ற கட்சி. எங்களுடைய குடும்பம், ஒரு கார் வாங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. அதை எடுத்து கொண்டு திருப்பதி சென்று வந்தோம். தற்போது அந்த காரை வாங்கியிருக்கிறோம் என்று தவறான கண்ணோட்டத்தில் சொல்லி வருகிறார்கள். ஒரு கார் வாங்கும் அளவுக்கு கூட ஒரு கட்சி தலைவர் குடும்பத்திற்கு தகுதி இல்லையா? கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். தான் சம்பாதித்த சொத்தில் 90சதவீதம் மக்களுக்காக செலவு செய்து நலத்திட்டங்களை செய்தார். அவர் செய்த ஒவ்வொரு உதவிக்கும் பின்னால் இருந்தது நான் என்று இந்த உலகம் அறியும். குறை சொல்லும் வாய் குறை சொல்லிக் கொண்டு தான் இருக்கும். 0.5 சதவீதம் ஒட்டு வைத்திருக்கும் கட்சிக்கு எம்.பி சீட் எதற்கு என்றும், திமுக கூட்டணியில் ஏன் அதிக தொகுதிகள் என்றும் தேமுதிகவை பேசுகிறீர்கள். தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் என்று யாருக்கும் தெரியுமா? தெரியாமல் பேசக்கூடாது, வாழ்த்துவோர் வாழ்த்தட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். எல்லாபுகழும் எங்கள் கேப்டனுக்கே. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.