மக்கள் பணியாற்ற வேண்டும் என்றால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருந்தார். இதற்கு த.வெ.க. நிர்வாகி நாஞ்சில் சம்பத் மற்றும் திமுக பெண் எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். நடிகை திரிஷா தரப்பிலும் இன்று( பிப்.16) கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை. நானும் அவ்வாறு பேசியதில்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. அது குறித்து எங்கள் கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் என்னிடம் பேசினார். நேற்று முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வீட்டுக்குச் சென்றபோது இந்த விவகாரம் குறித்து பேசினார். உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Comments are closed.