சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச் 81) பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு சுமாா் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தொடங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டது. 167 கி.மீ. நீளம் கொண்ட இந்தச் சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பிறகு தற்போது 134 கிலோ மீட்டராக உள்ளது. இந்த நெடுஞ்சாலை வாயிலாக திருச்சி, அரியலூா், கடலூா் மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை திருச்சியில் இருந்து கல்லகம் வரையிலும், கல்லகத்தில் இருந்து மீன்சுருட்டி வரையிலும், மீன்சுருட்டியில் இருந்து சிதம்பரம் வரையிலும் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது சிதம்பரத்திலிருந்து மீன்சுருட்டிக்கு சுமாா் 30 நிமிடங்களில் சென்றடையலாம். இந்த நெடுஞ்சாலையில் கல்லக்குடி, உடையாா்பாளையம் அருகே மணகெதி, காட்டுமன்னாா்கோவில் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து கல்லகம் வரை முதல் 50 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச் சாலையாகவும், அடுத்த இரண்டு பிரிவுகளும் இரண்டு வழி சாலைகளாகவும் அமைக்கப்பட்டுள்ள சாலைகள்,பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.