ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து இன்று (ஜூன் 2) ஒரு காரில் 7 பேர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் பயணம் செய்த எஸ். பாலசுப்பிரமணியன்( வயது 31) மற்றும் எம்.கார்த்திக்(33) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்த 5 பேர் முதலில் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் கவிதா(27) மற்றும் முருகேசன் (50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.