திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய வாலிபர் 2 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு…!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூரை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தி.க கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் ராஜராஜன்(35) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவர் சொந்த ஊர் வந்து இருந்தார். இந்தநிலையில் அவர் 2 நாட்களுக்கு முன்பு தன் நண்பனுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வேங்கூர் பூசத்துறை பகுதிக்கு சென்றுள்ளார். அவர் ஆற்றில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். இதனை கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பன் கொடுத்த தகவலின் பேரில் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜராஜனின் உடலை தேடும்பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி ராஜராஜனை தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இன்று(26-11-2024) இரண்டாவது நாளாக ராஜராஜனை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது கல்லணை அருகே உள்ள தோகூர் பகுதியில் ராஜராஜன் உடல் ஒதுங்கி கிடந்தது. அவரது உடலை தீயணைப்பு துறையினர் மற்றும் தோகூர் போலீசார் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.