Rock Fort Times
Online News

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்- இபிஎஸ் அதிரடி…!

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது வீட்டில், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் குடியிருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணுக்கு பொன்னம்பலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த இரண்டு பெண்களும் வீட்டிலிருந்து வெளியேறி கீழ்படப்பை பகுதியில் மற்றொரு வாடகை வீட்டில் குடியேறினர். இதனிடையே, இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட பொன்னம்பலம், குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும், அவரது சக நண்பர்களும் பொன்னம்பலத்தை சரமாரியாக தாக்கி மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.  இந்நிலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொன்னம்பலத்தை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம். பொன்னம்பலம், (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்