புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை- மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் எச்சரிக்கை…!
புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி இரவு, பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், இன்று இரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறக்கவுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லிக்கொண்டு இடையூறு செய்வது, கிண்டல் செய்வது, கூச்சலிடுவது, வாகனங்களில் வேகமாக செல்வது, பொது இடங்களில் கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபடுவோர் மீது ரோந்துப்பணியில் உள்ள போலீசார் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வர். புத்தாண்டு பிறப்பையொட்டி மாநகரில் அனைத்து காவல் நிலையப் பகுதிகளிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 350 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடவுள்ளனர். மேலும், மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள 9 சோதனைச் சாவடிகளிலும், கூடுதலாக போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.