வேலூர் அருகே ரத்த காயங்களுடன் காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த இளம்பெண்- சிறுத்தை தாக்கியதில் இறந்ததாக தகவல்…!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துருவம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். விவசாயி. இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேருக்கு திருமணம் ஆன நிலையில் இளைய மகள் அஞ்சலி (22) பி.காம் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர்களது வீடு துருவம் கொள்ளைமேடு வன எல்லையையொட்டிய காப்புகாடு பகுதியில் உள்ளது. இந்தநிலையில், வீட்டில் இருந்த பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக லீட்டருகே உள்ள காப்பு காட்டுக்கு அஞ்சலி தனியாக சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பாததால், சிவலிங்கம் மகளைத் தேடிக் காப்பு காட்டுக்கு சென்றார். அங்கு மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், கோட்டாட்சியர் எஸ்.சுபலட்சுமி, மாவட்ட வன அலுவலர்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறுத்தை தாக்கியதில் அஞ்சலி உயிரிழந்துள்ளார். சிறுத்தையை பிடிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ ஏற்பாடு செய்து தரப்படும்” என கூறினார்.
Comments are closed.