திருச்சி கே.கே.நகரை அடுத்த கே.சாத்தனூர் மேல தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. கொத்தனார். இவரது மனைவி ரேவதி (வயது 29). இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வீட்டில் தூங்கிவிட்டு ரேவதி காலையில் எழுந்து கழிவறைக்கு சென்றார். அங்கு பல் துலக்கும் பேஸ்ட்டும், எலி மருந்து பேஸ்ட்டும் அருகருகே இருந்துள்ளது. இதனை சரியாக கவனிக்காத ரேவதி, எலி மருந்து பேஸ்ட்டை எடுத்து பல் துலக்கி உள்ளார். இதில் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை உறவினர்கள், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.