பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா அண்மையில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்றது. அங்குள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் சமுதாய மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சமுதாய மக்கள் கார்களிலும், வேன்களிலும், இருசக்கர வாகனங்களிலும் கொடிகளுடன் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். அவர்களில் ஒரு வாலிபர் திருச்சியை அடுத்த நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புசுவரில் மொபட்டை ஓட்டிச் சென்று சாகசம் செய்தார். இதனை உடன் வந்த அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதுபோன்று ஆபத்தான சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் குருமூர்த்தி (வயது 22) என்பவர்தான் கொள்ளிடம் பாலம் தடுப்புச் சுவரின் மீது மொபட்டை ஓட்டி சாகசம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து குருமூர்த்தி மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Comments are closed.