முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளரா? “என்னை சிக்கலில் மாட்டி விட்டு விடாதீர்கள்”…* ‘எஸ்கேப்’ ஆன அமைச்சர் செங்கோட்டையன்..!
சென்னையில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக விமானம் மூலம் இன்று(04-09-2026) கோவை வந்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பேணி காக்கவும், போதைப்பொருளை கட்டுப்படுத்தவும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புதிய தலைமைச் செயலகம் இன்றைய சூழ்நிலையில் தேவைப்படுகின்ற ஒன்றாக உள்ளது. 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. முதலமைச்சர் சிலவற்றை 110 விதியில் அறிவிக்கிறார். இதில் தவறு எதுவும் கிடையாது” என்றார். தவெக ஆட்சி ஐந்து ஆண்டு நிலைக்காது என்ற எடப்பாடி பழனிச்சாமி
சொல்லியிருக்கிறாரே என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “அப்படி சொல்லிக் கொண்டு இருந்த காரணத்தால் தான் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது” என்றார். பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை, தலைவரை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக, எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார். இதுதொடர்பாக மேலும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “என்னை சிக்கலில் மாட்டி விட்டுவிடாதீர்கள்” எனக் கூறியவாறே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Comments are closed.