திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆவணி மாத பவுர்ணமி திதி நாளை (27-08-2026) வியாழக்கிழமை காலை 9.53 மணிக்குத் தொடங்கி, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.29 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட காலமே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பகலில் கிரிவலம் செல்வதைத் தவிர்த்து மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, சிறப்புப் பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து செய்து வருகின்றன.

Comments are closed.