ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் ‘நாடகம்’ நடத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நூதன போராட்டம்…!
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் நாடகம் அரங்கேற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 10ம் நாளான இன்று(31-07-2026) நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகர் த்வார் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுயேட்சை எம்பி பப்பு யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, காவி உடை அணிந்து போலி சாமியார் வேடத்தில் வந்த பப்பு யாதவ், உண்டியலை வைத்து பணம் வசூலிப்பது போலவும், பிறகு அவற்றை திருடிக்கொள்வது போலவும் நாடகம் ஒன்றை நடத்தினார். உண்டியலில் ராகுல் காந்தி காணிக்கை செலுத்துவது போல நாடகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய பேரணியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது, காணிக்கை திருட்டைக் கண்டித்தும், அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Comments are closed.