Rock Fort Times
Online News

சம்பவம் நடந்த அன்று மது போதையில் இருந்தேனா? * கோவை சிறுமியின் தாயார் பரபரப்பு பேட்டி!

கோவையை அடுத்த சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக், சிறுமிக்கு சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சிறுமியின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் விஜய், ரூ. 7 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தாயார் பவித்ரா, “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமல் எரித்துள்ளனர். உடலை வாங்க என்னை அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்ததும் எனக்கு தெரியாது. உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் குழந்தையின் உடலை என் கண்ணில்கூட காட்டவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், “யார் மீது குற்றம் என கண்டுபிடிக்க குழந்தையின் உடல் இல்லை. மருத்துவமனையில் என் கணவரின் மனதை மாற்றி குழந்தையின் உடலை கொடுத்துள்ளனர். உடலை ஒப்படைத்ததில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலை எரிப்பதில் ஏன் அவசரம் காட்டப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

மது போதையில் இருந்தேனா?

அத்துடன், “என்னை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றனர். வழக்கை திசை திருப்பவே அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு நிதி வேண்டாம், கொலை செய்யப்பட்ட என் குழந்தைக்கு நீதி வேண்டும். கொலையாளிக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இனி யாரும் இதுபோன்ற தவறு செய்யக்கூடாது. என் குழந்தை அணு அணுவாக துடித்து இறந்துள்ளது. அதேபோல் கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். குழந்தை காணாமல் போனபோது பவித்ரா மது அருந்தி இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “எனது மகள் காணாமல் போன சமயத்தில், எனது வீட்டிலுள்ள பிரிட்ஜில் வைத்திருந்த குளிர்பானத்தை எடுத்து குடித்தேன். அதில் என் கணவர் மதுவை கலக்கி வைத்திருந்தது எனக்கு தெரியாது. அதை நான் தெரியாமல் குடித்துவிட்டதால், குழந்தை காணாமல் போனபோது மதுபோதையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விஷயத்தில் யாரும் என்மீது அவதூறு பரப்ப வேண்டாம். குற்றவாளி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், குழந்தையை காண்பிக்காமல் எரித்த என் கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திக்குடன் எனக்கு எந்த பழக்கமும் இல்லை. சம்பவத்துக்கு பின்பு தான் அவன் பெயர் கார்த்திக் என்பதே எனக்கு தெரியும். எனது தரப்பு நியாயத்தை அதிகாரிகள் யாரும் பேச விடவில்லை” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் எங்களிடம் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். கொலையாளி கார்த்தியுடன் இருந்த பெண்ணுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருக்கிறது. அந்த பெண்ணிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்