அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, தமிழகத்தில் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கட்டட வேலை செய்வோர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நீர்ச்சத்து குறைபாட்டால் வாந்தி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கட்டாய தேவைக்காக வெளியே செல்ல நேரிட்டால் குடை, தொப்பி, சன்கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி, தளர்வான மற்றும் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மது, காபி, தேநீர் மற்றும் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பராமரிக்க இளநீர், பழச்சாறு மற்றும் நுங்கு போன்றவற்றை அருந்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.