தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தவெக எந்த காலத்திலும் மதச்சார்பின்மை கொள்கையை விட்டுக்கொடுக்காது.

“தவெக அவர்களுடன் கூட்டணி, இவர்களுடன் கூட்டணி என திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். தவெக யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. மக்களுடன் மட்டும் தான் நமக்கு கூட்டணி. மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இதில், யாருடனும் எதற்காகவும் தவெக சமரசம் செய்துக்கொள்ளாது. அதை உறுதியாகவே உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலுக்கு வந்ததில் இருந்து நம்மை பற்றி தொடர்ந்து திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள்.

யார் அவதூறு பரப்பினாலும் அதை நம்ப வேண்டாம். இறைவன் அருளால் நாம் எந்த நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்தோமோ அதை நிச்சயம் அடைவோம். நம்முடைய டார்க்கெட்டில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தவெக தலைமையில் நிச்சயம் ஆட்சி அமையும். நம்முடைய நல்ல நோக்கம் நிறைவேற இறைவன் அருள்புரிவார்” என தெரிவித்தார்.
தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செய்தி ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில், அது அத்தனைக்கும் தவெக தலைவர் விஜய் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதன் மூலம் திமுக, அதிமுகவை தவெக நேரடியாக எதிர்க்கும் என்பதை விஜய் மறைமுகமாக உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.


Comments are closed.