தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை திமுகவின் கூட்டணி பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கேட்டு வருகிறது. ஆனால் திமுகவோ ஆட்சியில் பங்கு தர இயலாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் திமுக- காங்கிரஸ் இடையில் இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகவை கேட்டதாகவும், தி.மு.க. தரப்பில் 23 தொகுதிகளை வழங்குகிறோம் என சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்காமல் பிடிவாதமாக இருப்பதால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் திமுக தவித்து வருகிறது.
இந்நிலையில் கூட்டணியை தக்கவைக்க கடைசி வாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கனிமொழி எம்.பி., செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர். காங்கிரஸ் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் முதலமைச்சரை, ப.சிதம்பரம் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.