வானியல் நிகழ்வுகளில் மிகவும் அற்புதமான ஒன்றாகக் கருதப்படும் முழு சந்திர கிரகணம் நாளை( மார்ச் 3) நிகழ உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கிரகணம் நாளை நிகழவுள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதையே சந்திர கிரகணம் என்கிறோம். முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் பூமியின் அடர்ந்த நிழலுக்குள் செல்வதால், அது ஒரு வித செந்நிறத்தில் காட்சியளிக்கும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நிகழ்வு மாலை நேரத்தில் நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 3-20 மணி அளவில் கிரகணம் தொடங்கி மாலை 6:48 மணி வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சந்திரன் உதிக்கும் போது கிரகணத்தின் இறுதிப் பகுதியே தெரியும். இருப்பினும், வடகிழக்கு இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள சில பகுதிகளில் முழு கிரகணத்தின் இறுதி கட்டத்தை தெளிவாகக் காண முடியும். இந்த அரிய வானியல் நிகழ்வைக் காணத் தவறாதீர்கள். இதனை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக, சென்னையில் உள்ளவர்கள், மார்ச் 3 அன்று நிகழவுள்ள முழு சந்திர கிரகணத்தின் இறுதிப் பகுதியை சுமார் 31 நிமிடங்கள் வரை காண முடியும். சென்னையைத் தவிர்த்து கன்னியாகுமரி போன்ற தென் தமிழகப் பகுதிகளிலும் சுமார் 31 நிமிடங்கள் வரை இந்த நிகழ்வைக் காண வாய்ப்புள்ளது. மேகங்கள் இடையூறு செய்யாமல் இருந்தால் குறிப்பிட்ட நேரங்களில் நாம் முழு சந்திர கிரகணத்தையும் பார்த்து மகிழ முடியும்.

Comments are closed.