மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட முகப்பில் இருந்த பெரியார் படம் அகற்றப்பட்டதால் பரபரப்பு….!
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினரை ஆதரித்து ஏற்கனவே மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது மதுரையில் நாளை (01-03-2026) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப்.28)இரவு சென்னை வருகிறார்.பின்னர் அவர், இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (மார்ச் 1) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகையை முன்னிட்டு மதுரை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தநிலையில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்ட முகப்பு பகுதியில் அண்ணா மற்றும் பெரியார் படங்கள் இடம்பெற்று இருந்தன. அவற்றில் பெரியார் படம் தற்போது அகற்றப்பட்டு உள்ளது இது, பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் திராவிட கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.