Rock Fort Times
Online News

தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு முன்பாக மு.க.ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு…!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று( பிப்.28) காலை காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் பங்கேற்ற நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்தார். அவரும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு வந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை வைப்பதற்காக சந்தித்தேன். காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் சேர்க்க கோரிக்கை விடுத்தேன். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கு சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு மூலம் இலவச மின்சாரம் கொடுக்க அரசு முயன்றால், இந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டு விடலாம் என்பதையும் தெரிவித்தேன். திருச்செந்தூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபம் அவரது வழிவந்தவரிடம் இருந்து மற்றொருவர் வசம் சென்றுள்ளது. இதற்கு அறநிலையத்துறை இணை ஆணையரும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைத்தேன். இந்த 3 கோரிக்கைகளுக்காகத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் என்று கூறினார். தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், “தொகுதி பங்கீடு குறித்து பேசினீர்களா?” என்று கேள்வி எழுப்பியதற்கு, “தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை” என்றார். திமுகவில் ஒ.பன்னீர்செல்வம் இணைந்தது குறித்த கேள்விக்கு, “யார் வந்தாலும் நல்வரவாக இருக்கட்டும்” என்று பதில் அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்