புதிய கூட்டுக் குடிநீர் திட்ட தாமதத்திற்கு மத்திய அரசு தான் காரணம்* சட்டப்பேரவையில் ஜிகே மணி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்!
புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதற்கு மத்திய அரசு தான் காரணம் என அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில், இன்று (பிப்.19) ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பெரியளவில் பயன் தரவில்லை என்றும், புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? என சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ”தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் 8900 கோடி ரூபாயில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது பணி தாமதத்திற்கு மத்திய அரசு தான் காரணம். ஏனென்றால் ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை 18 திட்டங்களுக்கு விடுவிக்கப்படவில்லை. அதற்கான 5500 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசே வழங்கியுள்ளது. ஆனால், அதை பயன்படுத்த முடியவில்லை. மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஜல்ஜீவன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது” என பதில் அளித்தார்.

Comments are closed.