தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நெல்லை, பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரெயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் இன்று( ஜன. 1) முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும். எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்கு புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50-க்கு புறப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும். செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கு புறப்படும். ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்கு புறப்படும். தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும். இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை. அதேநேரத்தில் மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.