தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணியை நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தியது. அதனைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியானது. அதில், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 97.37 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டனர். எஸ்.ஐ.ஆருக்கு முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை ஜனவரி 18ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமை களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.