Rock Fort Times
Online News

சென்னை, மயிலாப்பூரில் நடுரோட்டில் வாலிபரை கொலை செய்த ரவுடியை அதிரடியாக சுட்டுப் பிடித்த போலீசார்…!

சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்ட பகுதியை சேர்ந்தவர் மௌலி (28). இவர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.20) இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மௌலி நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மௌலியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.21) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், முதல் கட்டமாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று மாலை கௌதம், நிரஞ்சன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஜயகுமார் (23) தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் விஜயகுமார் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், இன்று (நவ. 22) காலை விஜயகுமாரை பிடிக்க முற்பட்டனர். அப்போது, விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தனது துப்பாக்கியால் விஜயகுமார் காலில் சுட்டுப் பிடித்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவுடி விஜய்குமார், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விஜயகுமார் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்