முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு ஆர்வலர். இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து வெளிவரும் போது முன்னால் இருந்த கம்பத்தில் முட்டி மயங்கியது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் 300க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்காின் புகழ்பெற்ற கொம்பன் காளை, 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. புகழ்பெற்ற தன்னுடைய இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் குடும்பம் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மறைந்த கருப்பு கொம்பனுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் காளையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.