முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முகூர்த்த தினம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று( அக்.24) 365 பேருந்துகளும், நாளை 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வருகிற 27ம் தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் வரும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் 27ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் பயணிக்க www.tnstc.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.