திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் என 850-ற்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை, காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரத்தினம் ஆலோசனையின் பேரில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையுடன் இணைந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் “கருடன்” எனும் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டு, சுப்பிரமணியபுரம், காவல் திருமண மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்செ.செல்வநாகரத்தினம், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கும் “கருடன்” மொபைல் செயலி உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய அண்ணா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் இறுதியாண்டு மாணவர்களான அகில் அகமத், ஆசிப் நவ்ஹித், மோகன் ஆகியோரை பாராட்டினார். மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு இச்செயலியின் முக்கியத்துவம் குறித்தும், செயலியை பயன்படுத்துதல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

Comments are closed.