திருச்சி, சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ள சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் சித்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த சித்த மருத்துவமனை ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் வேறுஎன்ன சொல்ல முடியும் செய்ய முடியும். தமிழகத்தில் வெள்ளம் வந்து மக்கள் தவித்தபோது மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை. அப்போது வராத பாஜக எம்பிக்கள்குழு உடனடியாக இந்த நிகழ்வுக்கு வருவதற்கு காரணம் என்ன என்று முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி, பாஜக கூட்டணியில் அதிமுகவும் இருப்பதால் அதுபோன்றுதான் பேசுவார், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் கூறியதுதான் உண்மை நிலைமை. கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது. விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை என பத்திரிகை மட்டும் ஊடகங்கள் கூறுகிறது. விஜய் கூட்டத்திற்கு அனுமதி வாங்கியவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றம் அக்கட்சி பற்றி கூறி இருக்கிற நிலையில் அவர்களை (விஜய்யை) பார்த்து நாங்கள்ஏன் பயப்படவேண்டும்?. எதுவந்தாலும் நாங்கள் சந்திப்போம் என்று தெரிவித்தார்.

Comments are closed.