துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இன்று( செப்.10) காலை அவர் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினார். இதற்கிடையே அவருக்கு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் (செப்.12) நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள். துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. பதவி ஏற்பு நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அதற்கு ஏற்ப அழைப்பிதழ் வெளியிடப்படும். துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.
Comments are closed.